'அ' முதல் அமெரிக்காவரை வரிசையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி தொடர்ந்து உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா மற்றும் ஆதவன் சிபி. அமெரிக்கா வந்து இறங்கும் இந்திய மாணவர்கள், அதிலும் பெரும்பாலும் முதல்முறை வருகிறவர்கள், அன்றாட அமெரிக்க வாழ்க்கைமுறைக்கு அனுசரித்துப் போவதில் ஒரேவிதமான குழப்பங்களைத்தான் சந்திக்கிறார்கள். அது சாலையைக் கடப்பதாக இருக்கலாம்; நகரத்தில் பயணிப்பதாக இருக்கலாம்; அவை நம்நாட்டு நடைமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாவே இருக்கிறது. இந்த தனிமையான காலகட்டத்தைக் கடந்து இது எனக்கு பழக்கமான ஊர் என்ற உணர்வு வருவதற்கு ஒரே வழி அல்லது மிகச்சிறந்த வழி நமக்கு முன்னால் வந்து இங்கே நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறார்களே சக இந்திய மாணவர்கள், அவர்களோடு கலாச்சார நிகழ்வுகளில் கலந்து உற்சாகமாக பழகுவதுதான். புது நாட்டில் புது ஊரில் அவனவன் எப்படியெப்படி சொதப்பினான் என்று ஆளுக்கொரு திரைக்கதை வைத்திருப்பான்; அந்த சுவாரஸ்யமான கதைகளைக் கேட்டால் போதும். ஆறுமாத ஞானத்தை / பட்டறிவை அல்லல்படாமலேயே அடைந்துவிடலாம்.